Wednesday, April 16, 2014

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?

‘எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருப்பவர்கள் இன்னும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று நினைப்பதுதான் மனித இயல்பு. பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், ‘எப்போது இதிலிருந்து வெளியே வருவோம்’ என்று ஏங்குவார்கள். ஜெயித்தவர்கள் பலரும் அந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதற்கு போராடுகிறார்கள். விழுந்து கிடப்பவர்கள் எழ முயற்சிக்கிறார்கள். இப்படியாக வாழ்க்கை சக்கரம் சுழன்றபடி இருக்கிறது.

இதற்கு மத்தியில்தான் நம்பிக்கை வைத்தோ, நாலு பேர் சொல்கிறார்களே என்பதற்காகவோ, ‘நமக்கு நேரம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்துத்தான் வைப்போம்’ என்று ஜோதிடர்களைத் தேடி ஓடுகிறோம். கொஞ்சம் நம்பிக்கையோடு அணுகும்போது, கிரகங்கள் அன்றாட வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை புரிந்துகொண்டு ஆச்சரியமாகிறோம். ‘‘இதுல இவ்ளோ விஷயம் இருக்கா’’ என்று இன்னும் கொஞ்சம் கிரகங்களை நெருங்குகிறோம்.  

‘‘ஒண்ணும் பிசினஸே சரியில்லையே. இந்த மாசம் சுக்கிரன் எங்க இருக்கான்’’ என்று பஞ்சாங்கத்தையும், பத்திரிகைகளையும் புரட்டுகிறோம். ‘‘பாசிட்டிவ்வா எதுவுமே நடக்கலையே. எப்போ நல்ல நேரம்’’ என்று குருப் பெயர்ச்சி ஆகும்போதெல்லாம் எதிர்பார்ப்போடு இருக்கிறோம். ‘‘நாலுல இருந்த ராகு, இப்போ மூணுக்குப் போகுது. இனிமே நமக்கு நல்ல நேரம்தான்’’ என்று ஆறுதல் கொள்கிறோம். ‘‘அஷ்டமச் சனி ஆட்டிப் படைக்குதே. இனி என்ன செய்யப் போகிறோம்’’ என்று அடுத்த பெயர்ச்சி வரை தவிப்போடு சிலர் காத்திருக்கிறார்கள். குரு பெயர்ந்தும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களும் இருக்கிறார்கள்.  

எத்தனை பெயர்ச்சிகள் வந்தாலும், ‘‘உங்களுக்கு கடன்கார தசை ஓடிக்கிட்டிருக்கு. கவனமா இருங்க’’ என்றுதான் ஜோதிடர் சொல்வார். ஏனெனில், பெயர்ச்சிகள் குறிப்பிட்ட கால அளவுகளுக்குள் பலன்களைத் தந்துவிட்டு நகர்ந்து விடும். ஆனால், தசாபுக்திகள் என்றழைப்படும் சுக்கிர தசை, குரு தசை, செவ்வாய் தசை, சனி தசை என்று இன்னபிற தசைகளெல்லாம்தான் தனி மனித வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இவையே மிக அழுத்தமாக பாதிக்கவும், பலன்களை வழங்கவும் செய்கின்றன. இவை எல்லாவற்றையும் விட, தனி மனித ஜாதகங்களின் அடிப்படையில் நிகழும் பலன்களுக்குத்தான் வலிமை அதிகம்.

இதுவரை நாம் நட்சத்திரங்களையும், ராசிகளையும் வைத்துப் பார்த்தோம். ஆனால், ஜோதிடர் உங்கள் ஜாதக கட்டத்திலுள்ள லக்னத்தை வைத்துத்தான் பலன் சொல்வார். ‘‘உங்களின் ராசி என்ன’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவார்கள். ஆனால், ‘‘உங்களின் லக்னம் என்ன’’ என்று கேட்டால் நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், ஜோதிடர் ராசிக் கட்டத்தை நோக்கும்போது லக்னம் என்ன என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் லக்னம்தான் அது. பூமிக்கு பூமத்திய ரேகை போன்று, உங்களின் மையச் சக்தி குவிந்திருக்கும் ராசியே லக்னம் என்று வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம் என்கிறார்கள். ராசி என்பது சந்திரன் எங்கு இருந்தபோது நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது. மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். ராசிக் கட்டங்களில் ஆங்காங்கு கிடக்கிற கிரகங்களின் பலம், பலவீனங்களை, திறனை லக்னம்தான் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் நல்லது செய்யும் யோகாதிபதிகள் என்றும், சுகத்தை அருளும் சுகாதிபதிகள் எவர் என்றும், பாக்கியத்தை கொடுக்கும் பாக்கியாதிபதி கிரகம் எது என்றும் பார்க்கலாம். ஏனெனில், உங்களை கிரகப் பெயர்ச்சி கைவிட்டாலும், தசா புக்திகள் தடுமாற்றம் கொள்ள வைத்தாலும், இந்த மூவரும் உங்களை பெற்றோர் போலக் காப்பாற்றுவார்கள். உங்களுக்கு எப்போதும் நல்லது செய்யவே முயற்சிப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் இவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரிதான்... சிரமப்பட்டாவது நன்மையைத்தான் கொடுப்பார்கள். மனிதர்கள் வாக்கு தவறக் கூடும். ஆனால், கிரகங்கள் சத்தியத்தின் பாதையைத் தவற விடுவதில்லை. கூட இருக்கும் கிரகம் எதிரியாக இருந்தாலும், தன் முறை என்று வரும்போது கொட்டிக் கொடுத்து விடும். ‘‘கொஞ்சம் அமைதியா இருந்துக்க. அடுத்து என் ரவுண்ட்தான். அப்போ உனக்கு என்ன தரணுமோ அதை தருவேன்’’ என்று சொல்லாமல் பல சமயங்களில் உணர்த்தும்.

முதலில் மேஷ லக்னத்தில் யார் நல்லதைச் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். உங்களுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் வருகிறார். செவ்வாய் உங்களுக்கு குலதெய்வம்போல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜாதகத்தில் அவர் எந்த நிலையில் இருந்தாலும், உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறார். அதே செவ்வாயே அஷ்டம ஸ்தானம் என்கிற எட்டாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், வீண் செலவுகளையும், திட்டமிடாத பயணங்களையும் தரக் கூடியவராக வருகிறார். ஆனாலும், அதையும் மீறி அலைச்சலை ஆதாயமாக மாற்றாமல் விட மாட்டார். மேஷ லக்னத்திற்கு சூரியன், சந்திரன், குரு போன்றவர்கள் பிரபல யோகாதிபதிகள். இந்த மூன்று கிரகங்களும்தான் உங்களுக்கு நல்ல காலங்களையும், நற்பலன்களையும் தரப் போகிறவர்கள். உங்கள் ஜாதகத்தின் கீ பிளானட்ஸே இவைதான்.  

முதலில் சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் சுகாதிபதியாகவும் வீடு, மனை வாகன யோகங்களைத் தருபவராகவும் இருக்கிறார். இதே சந்திரன்தான் மாதுர்காரகன் எனும் தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். நீங்கள் வளர்பிறையில் பிறந்து ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால், சுகமான வாழ்க்கை அமையும். எப்போதுமே சந்திர தசை, அல்லது வேறெந்த தசை நடந்தாலும், அதில் வரும் சந்திர புக்தி, திங்கட் கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள், 2, 11, 20, 29 தேதிகள் என்று சந்திரனின் ஆதிக்கமுள்ள அனைத்து நேரங்களிலும் உங்களுக்கு நன்மையான செயல்களே நடைபெறும். உங்களின் சுகமான தினங்கள் யாவும் சந்திரனின் ஆதிக்கமுள்ள நாட்களாக இருந்திருக்கும்; அல்லது இருக்கவும் செய்யும்.

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால், அம்மாவின் அசையாச் சொத்து, அறிவுச் சொத்து எல்லாமுமே உங்களை வந்து சேரும். அதே சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ, கிரகயுத்த அவஸ்தையை அடைந்திருந்தாலோ, சூரியனால் ஏற்படக் கூடிய அஸ்தங்க அவஸ்தையைப் பெற்றிருந்தாலோ சுகபோகங்களை எளிதாக அடையாமல் தவிப்பீர்கள். தாயாரின் ஆசைகளை நிறைவேற்ற முடியாது அழுவீர்கள். தாய்வழிச் சொத்து வருகிறதோ இல்லையோ, தாய்க்கு வரும் நோய்கள் உங்களையும் துரத்தும்.

காலாகாலத்தில் கல்யாண யோகத்தை அளிக்கக் கூடியவர், சுக்கிரன். ஆனால், சர லக்னமான மேஷத்தில் நீங்கள் பிறந்திருப்பதால் சுக்கிரன் உங்களுக்கு பாவியாவார். ஆனால், சூரியன் இருப்பதால் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், சூரியன் பூர்வ புண்ணியாதிபதியாக வருகிறார். அதனால் சரியான வயதில் வாரிசுகளை அளித்து விடுவார். சத்புத்திர சந்தான பாக்கியத்தை சூரியன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் அந்தஸ்தையும், செல்வாக்கையும் பல மடங்கு உயர்த்துவார். இவ்வாறு பிதுர்காரகனான சூரியன் பூர்வ புண்ணியாதிபதியாக வருவதால், பெரியவர்களுடைய ஆசியும், வழிநடத்துதலும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். சூரிய தசை, சூரிய புக்தி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள், ஞாயிற்றுக்கிழமை, 1, 10, 19, 28 போன்ற நாட்கள் என்று எல்லாமுமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு. ஏற்கனவே கைவிட்ட முயற்சியை, குறைந்தது அந்தந்த தினங்களில் தூசு தட்டி எடுங்கள். விருத்தியாகும். முக்கியமாக அரசாங்க உத்யோகம், அரசாங்க அதிகாரிகளின் நெருக்கம், பிள்ளைகளின் திருமண முயற்சிகள், பூர்வீகச் சொத்து விஷயங்கள் என்று பல காரியங்களை மேற்கொண்டால் வெற்றி எளிதாகும்.

குரு உங்களுக்கு பாக்கியாதிபதியாக வருகிறார். உங்களின் பண வரவை தீர்மானிக்கிறார். சரளமான பணப் புழக்கத்திற்கு குருதான் உதவுகிறார். உங்களின் ஏ.டி.எம் கார்டே குருதான். உங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவார். தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் இவற்றையெல்லாம் அவர்தான் அருள்கிறார். மாலை, மரியாதையோடு முதல் இருக்கை கௌரவத்தையும் பெற்றுத் தருவார். தான் வாழும் காலத்திலேயே பிள்ளைகளின் பெருமைகளைக் கேட்கும் சந்தோஷத்தையும் தருகிறார். தந்தையைத் தாண்டிய நுண்ணறிவு பெற்றவராகவும் விளங்க வைப்பார். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, 3, 12, 21, 30 போன்ற தேதிகள் என்று குறிப்பிட்ட இந்த காலங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

பொதுவாக இந்த மூன்று கிரகங்களுமே சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால், எல்லா விஷயங்களும் காலதாமதமாகிக் கிடைக்கும். ‘‘என் ஜாதகத்துல இவங்க எப்படி இருக்காங்கன்னே எனக்குத் தெரியாது’’ என்று சொல்வீர்களானால், நடைமுறையில் சிலவற்றைப் பின்பற்றலாம். உளுந்தை தவிர்த்து விடுங்கள். வேர்க்கடலை, பனங்கற்கண்டு பால், மலை வாழைப்பழம் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வியாழக்கிழமையன்று தயிர்சாதத்தோடு எலுமிச்சை ஊறுகாய் வைத்தும், எலுமிச்சை சாதமுமாகவும் பசித்தவர்களுக்கு உங்களால் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்டு உதவுங்கள். குருவும், சூரியனும், சந்திரனும் உங்களின் ஜாதகத்தில் ஜொலிப்பார்கள். வாழ்க்கையை பிரகாசமாக்குவார்கள்.இந்த மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோக பலன்களை முழுமையாகப் பெறுவதற்கும், அதிர்ஷ்டங்கள் கைகூடுவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயமே திருச்சி மலைக்கோட்டையிலுள்ள தாயுமானவ சுவாமி ஆலயமாகும். அத்தலத்தில் உறையும் தாயுமானவரையும், மட்டுவார்குழலி அம்மையையும் தரிசித்து வாருங்கள். பிரச்னைகள் கரைந்து, பிரசித்தமான வாழ்க்கை வாழ்வீர்கள். இத்தலம் திருச்சி நகரின் மையத்திலேயே உள்ளது.

மாற்றம் தரும் மந்திரம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள், தங்கள் நல்வாழ்வுக்கு இந்த தாயுமானவ சுவாமி பதிகத்தை மனதார சொல்லலாம்...
அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

No comments:

Blogger Gadgets