Saturday, May 3, 2014

நட்சத்திர சார சூட்சமம்

ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம் அதனால் தான் சாரம் அறியாதவன் நூலை அறியான் என சொல்ல பட்டதோ என்னவோ?
 நட்த்திர சாரயியல் கணிதப்படி பார்க்கும் போது லக்னம் அமைந்த நட்சத்திரம் அதன் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு பலம் பெற்று 3.6.8.12ல் இல்லாமல் சூன்ய தன்மை பாதக தன்மை பெறாமல் இருக்க வேண்டும். இதே போல் சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியை பார்க்க வேண்டும். இதில் எது அதிக பலத்துடன் காணப்படுகிறதோ அதையே லக்னமாக பாவித்து பலன்களை சொல்ல வேண்டும். பிறந்த நட்சத்திரம் எதுவோ அதற்கு 3.5.7வதாக வரும் நட்சத்திரங்களில் நிற்கும் கிரக திசையானது எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆனாலும் அவ்வப்போது பாதிப்பை தராமல் இருக்காது. 1.9வது நட்சத்திரம் நின்ற கிரக திசைகள் புத்தி அந்தரம் மத்திம பலனை தரும் நன்மை தீமை கலந்து நடக்கும்.
 திசா நாதன் சூரியனாகி அவர் நின்ற நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்தால் சூரிய திசை பலன்கள் “அவுட்”. இதே போல் சந்திரனுக்கு 7வது நட்சத்திரம், புதனுக்கு 22வது நட்சத்திரம் செவ்வாய்க்கு 3வது நட்சத்திரம், குருவிற்கு 6வது நட்சத்திரம், சுக்கிரனுக்கு 24வது நட்சத்திரம், சனிக்கு 8வது நட்சத்திரம், ராகு, கேதுவுக்கு 20வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்து அவர் அவர்கள் திசா புத்தி நடந்தால் நல்ல பலன்களை யார் சொன்னாலும் நம்பாதீர்கள், நம்பி மோசம் போகாதீர்கள்.
 அஸ்வினி, மகம், மூலம்: இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது ராகுவின் புத்தியோ அந்திரமோ நடந்தால் எதிர்பாராத விபத்து, தொல்லைகள் தரும். சனி, கேது புத்தி அந்திர சூட்சமங்கள் பாதிப்பை தரும் இக்காலங்களில் குல தெய்வ வழிபாடு நவ கிரக ப்ரீதிகள் செய்வது நலம்.
 அவிட்டம், மிருகசீரிஷம், சித்தரை போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது கேதுவின் புத்தியோ அந்தரமோ சூட்சமமோ வந்தால் காரிய கேடு நாசம், செய் தொழில் பாதிப்பு தரும். சனி, ராகு, சூரியன் புத்தி அந்திரங்கள் பாதிப்பை தரலாம். இக்காலங்களில் தானியங்களை தானம் செய்யவும்.
 புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது சனியின் புத்தி, அந்திரம், சூட்சமமோ வந்தால் உயிருக்கு ஆபத்தான காரியங்கள் நிந்தனை படல், காவல் துறையினரால் ஆபத்து அடிதடி வம்பு வழக்கு போன்றவைகளால் பயம் ஏற்படும். மேலே சொல்லப் பட்ட பலன்கள் சூரியன், செவ்வாய் புத்தி அந்திர சூட்சமங்களுக்கும் பொருந்தும். இக்காலங்களில் எண்ணெய், நெய் வஸ்திரம் தானம் செய்தால் தொல்லைகள் விலகும்.
 பரணி, பூசம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது எதிர்பாராத வகையில் பெண்களால் தொல்லை, திருமண காரியம் எதிர்பாராமல் தடைபெறல், ஜலபயம், விஷபயம், கணவன் மனைவி பிரிவினை போன்றவை நடைபெறும். வாகன விபத்தால் ஆயுள் பயம் சனி, சூரியன், செவ்வாய், கேது காலங்களில் மேற்படி பலன்கள் நடைபெறக்கூடும். இதற்கு வஸ்திரம், அன்னம் தானம் செய்வது மிக உத்தமம். திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து கேது புத்தி, அந்திரம்,  சூட்சமம் வரும்போது விஷபயம், காரியகேடு, வாகன விபத்து, எதிரிகளால் வைப்பு, சூனியம், தோஷம், கணவன் மனைவி உறவில் பாதிப்பு அசுப காரியம் நடைபெறும். கர்ப்ப கோளாறு, பிரயாணத்தில் பயம், எதிர்பாராத வம்பு வழக்குகளால் தொல்லை காணும். சனி, ராகு, சந்திர புத்தி அந்திரங்களிலும் மேற்படி பலன்கள் நடைபெறக்கூடும்.
 பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது சனி அந்திரம், புத்தி, சூட்சமம் வரும் போது கட்டுபடல், வதைப்பு, திருட்டு, கற்பழிப்பு, காரிய நாசம் , எக்காரியம் செய்தாலும் பலிதமின்மை, வாகன விபத்து தரும். மேலே சொல்லப்பட்ட பலன்கள் சூரியன், செவ்வாய் புத்தி அந்திரம் சூட்சமம் வரும் போது நடக்கும் கடுமையான பலன்கள் தரும் காலங்களில் நவகிரக ஹோமம், விநாயகர் வழிபாடு அன்னதானம் புண்ணிய தீர்த்தம் ஸ்தல யாத்திரை செல்வது நலம். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது தசா நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன் புத்தி, அந்திரம், சூட்சமம் வரும் போது யோக பலன்களை விருத்தி செய்யும். சுப பலன்களை தரும் தனவிருத்தி, தொழில் கிடைத்தல் ரோக பயம் விலகல், தெய்வ பலம் கிட்டும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது தசா நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன், புத்தி, அந்திரம், சூட்சமம் வரும் போது யோக பலன்களை விருத்தி செய்யும். சுப பலன்களை தரும். தனவிருத்தி, தொழில் கிடைத்தல், ரோக பயம் விலகல், தெய்வ பலம் கிட்டும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்தரங்கள் ஒன்றில பிறந்தவர்களுக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசைபுத்தி அந்திர சூட்சமம் காலங்களில் யோக பலன்களை விருத்தி செய்யும். திருமண யோகம், புத்திர பாக்கியம், தனதான்ய சேர்க்கை ஏற்படும். அம்மன் வழிபாடு செய்தால் யோகம் பலம் அடையும்.
 மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசை நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன் புத்தி சந்திர சூட்சமங்கள் வரும்போது நல்ல கால துவக்கம் செய்யும் காரியங்களில் வெற்றியை தரும். தொல்லைகளில் இருந்து விலகும் வாய்ப்பு வரும் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் வேறு கிரகம் இருந்தால் மத்திம பலனை தரும். முருகன், சிவன், துர்கை வழிபாடு செய்வது யோக பலனை விருத்தி செய்யும். தொல்லைகளில் இருந்து விலகும் வாய்ப்பு வளரும்.
 திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன் சந்திரன் புத்தி சூட்சம அந்திரங்கள் கண்டிப்பாய் யோக பலன்களை தரும். தொழில் லாபம், எடுத்த காரியம் ஜெயம், பிரயாணம், தூரத்து செய்தி கிடைத்தல், சொத்து சேர்க்கை ஏற்படும், அரசாங்க வகை லாபம் உண்டு.
 புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன், புத்தி, அந்திரம், சூட்சமங்கள் எதிர்பாராத காரிய ஜெயம், யோக விருத்தி, தொழில் பலம் தரும். மகான்கள் தரிசனம், ஸ்தல பிரயாணம், வழக்கு ஜெயம் போன்ற பலன்களை தரும். விஷ்ணு வழிபாடு நலம் தரும்.
 பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் ஒரு கிரகம் இருந்து தனது திசை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன் சந்திரன் அந்திர சூட்சமங்கள் வரும் போது மிக யோக பலன்கள் நடைபெறும். தொழில் பலம் விருத்தி, பதவி உயர்வு, லாட்டரி யோகம், வாகன சேர்க்கை போன்ற பலன்களை தரும். விநாயகர் வழிபாடு செய்வது நலம்.
 ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன், சந்திரன் புத்தி அந்திர சூட்சமங்கள் மிக மேலான யோக பலன்களை தராமல் இருக்காது. அரசாங்க வகையில் லாபம், லாட்டரி யோகம், பதவி உயர்வு, இனபந்துக்களால் நன்மை, பூமி சேர்க்கை போன்றவைகளை தரும். விஷ்ணு லட்சுமி துர்கை வழிபாடு புரிவதால் யோகம் பலம் தரும்.
 இதுவரையில் சொல்லப்பட்ட யோக அவயோக பலன்களை லக்னம் அமைந்த நட்சத்திரத்தையும் பிறந்த நட்சத்திரமாக எண்ணி பார்க்கலாம். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி இருவருள் யார் அதிகம் பலம் பெற்றுள்ளனரோ அவரின் நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரமாக கொண்டு பலன் பார்க்கலாம்.

No comments:

Blogger Gadgets