Thursday, February 6, 2014

ஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்

ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந்த ஒரு பிரச்சனைக்கும் மூலம் என்று ஒன்று இருக்கும். விடை என்ற ஒன்றும் இருக்கும். பிரச்சனைக்குரிய காரணங்களைத் தெரிந்து கொண்டால் அதற்குரிய தீர்வையும் எளிதாக தேடிவிடலாம்.

மருத்துவ வளர்ச்சி அதிகரித்துவிட்ட போதும் இன்னும் குழந்தையின்மை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஆண் மட்டுமோ அல்லது பெண் மட்டுமோ காரணம் அல்ல. கிரக சூழ்நிலைகளும் மன நிலைகளும் காரணமாக அமைகிறது. குழந்தை என்பது என்ன நம்முடைய மரபு வழி சந்தததி. நமது பாரம்பரிய வாரிசு. இதைத் தான் பூர்வ புண்ணியம் என்று ஜோதிடம் கூறுகிறது.

ஐந்தாம் பாவம் (ஸ்தானம்) தான் குழந்தையைக் குறிக்கும் ஸ்தானம். ஐந்தாம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பின் பிள்ளைகளால் மனவருத்தம் உண்டாகும் என்பது தான் உண்மை. அது பிள்ளைகள் இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் தொல்லைகள் வரலாம். இது இயற்கை நியதி. பிள்ளைகளால் வரும் தொல்லைகளை மற்றுமொரு கட்டுரையில் காணலாம். இப்பொழுது குழந்தைப் பாக்கியம் கிடைக்க என்ன வழி என்பதை மட்டும் ஆராயலாம்.

திருமணத்திற்கு பின்பு தான் நாம் குழந்தைபிறப்பைப் பற்றி சிந்திக்கிறோம். அது தவறு. திருமண வயது நெருங்கும் போதோ அல்லது திருமணத்திற்கு தயாராகும் போதோ நம்முடைய ஜாதகத்தை ஆராய்ந்து தெளிதல் வேண்டும். முக்கியமாக குழந்தைபாக்கியமான ஐந்தாம் பாவத்தை ஆராய்ந்து அதில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டும். உடல் ரீதியாக குழந்தைப் பேற்றிற்காக நம் உடலையும் மனதையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் ஐந்தாம் பாவத்திற்கு மூன்றாம் பாவமாக விளங்குவது ஏழாம் பாவம். அதாவது குழந்தை தொடர்பான (5ம் பாவம்) வீரியத்திற்கு (3ம் பாவம்) களத்திரமும் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்) பொருப்பேற்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைசொல்லக்கூடாது. வெறும் நட்சத்திர திருமணப்பொருத்தம் மட்டுமே பார்த்துவிட்டு திருமணங்கள் நடத்தக்கூடாது. முழு ஜாதகமும் முறைப்படி ஆராயப்பட வேண்டும்.

ஐந்தாம் பாவம் மட்டுமல்ல. நான்காம் பாவமும் குழந்தைபிறப்போடு தொடர்புடையது தான். ஐந்தாம் பாவத்திற்கு அயன சயன மோட்ச பாவமான நான்காம் பாவம்  (காமத் திரிகோணம்) நன்கு இருந்தால் தான் தாம்பத்தியம் திருப்திகரமான முறையில் நிகழும்.

ஐந்தாம் பாவம் பாதிப்பிற்குள்ளானவர்கள் முடிந்தவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடக்கூடாது. இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டம்.

கூடும் நாட்கள் கூடா நாட்கள் என்று நாட்களை வகைப்படுத்தியுள்ளார்கள். அந்தந்த நாட்களை கவனத்தில் வைத்து அன்றைய தினம் மனத்தையும் உடலையும் திருப்தியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் தாரா பலம், சந்திர பலம் உள்ள நாட்கள் மிகுந்த நன்மையைத் தரும். அம்மாவசை பவுர்ணமி நாட்களை விலக்குதல் நலம் தரும்.

இருவரும் சேர்ந்திருந்து ஐந்தாம் பாவமும் நன்றாக இருந்தால் குழந்தைபாக்கியம் கிட்டாத நிலை கண்டிப்பாக இருக்காது.

No comments:

Blogger Gadgets