Thursday, February 6, 2014

தொழில் வெற்றியின் இரகசியங்கள் :


தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி.

பொதுவாக வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெற செய்யும் முயற்சியே தொழில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்கிறோம். பணம் ஒருவருக்கு வாழ்க்கை, புகழ் ஒருவருக்கு, நிம்மதி ஒருவருக்கு, மோட்சம் ஒருவருக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைத் தேவை. அப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய நாம் எடுக்கும் முயற்சி தான். தொழில். பொதுவாக அனைவரும் பணத்தைத் தேடித்தான் ஓடுகிறோம். நம்முடைய வெற்றியின் விளைவுகளை பணத்துடன் தான் ஒப்பிடுகிறோம். நாம் எடுக்கும் முயற்சி தொழில் என்றால் நாம் அடையும் மகிழ்ச்சி தான் இலாபம்.

தொழில் என்பதும் வேலை என்பதும் சேவை என்பதும் ஒன்றுதான். அந்தப் பொதுவான வார்த்தைக்குரிய ஜோதிட வார்த்தைதான் பத்தாம் பாவம் அதாவது தொழில் பாவம். தொழில் என்பது பணத்தை மூலதனமாக்கி பணத்தை சம்பாதிப்பது. வேலை என்பது உடலுலைப்பை மூலதனமாக்கி பணம் சம்பாதிப்பது. சேவை என்பது இரண்டையும் மூலதனமாக்கி குறைவாக சம்பாதிப்பது. ஜாதகர் என்ன தொழில் செய்யலாம் என்பதைவிட எந்தத் தொழில் செய்தால் அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒருவருக்கு அமையும் தொழில் எவ்வாறு அவருக்கு பொருளையும் புகழையும் தருகிறது என்பது தான் ஜோதிடம் கூறும் செய்தி.

கால புருச தத்துவப்படி பத்தாம் பாவமாக வருவது மகரம். மேசம் முதல் மகரம் வரை பத்து. பத்தாம் அதிபதி சனி பகவான். தொழிலுக்கு காரகத்துவம் வகிப்பவர் சனி பகவான் தான். பத்தாம் பாவம் என்பது தொழிலுக்குரிய பொதுவான பாவம். அதைத் தவிர்த்து 12 பாவங்களிலும் தொழில் தொடர்பான நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஜோதிடத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்துதுறைத் தொழில்களையும் கூற முடியமா என்றால் முடியும். தொழிலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அறிவின் மூலம் செய்யும் தொழில்கள், உடல் உழைப்பின் மூலம் செய்யும் தொழில்கள், பணத்தைக் கொண்டு செய்யும் தொழில்கள். எந்த ஒரு தொழிலும் இம்மூன்றிற்குள் அடங்கி விடும்.

ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு இருந்த இடத்திலிருந்து புத்திசாலித்தனத்தால் செய்து முடித்தால் அது அறிவின் மூலம் செய்யப்பட்டதாக அர்த்தம். அதே செயலை ஓடி ஓடி உழைத்து செய்து முடித்தால் அது உழைப்பின் மூலமும், அறிவையும் உடலையும் பயன்படுத்தாமல் அடுத்தவர்களைப் பயன்படுத்தினால் அது பொருளின் மூலமும் செய்து முடிப்பதாக அர்த்தம். இதைத்தான் ஜோதிடம் விதி மதி கதி என்று கூறுகிறது. மதி என்னும் சந்திரன் மனதை ஆள்கிறது. கதி என்னும் சூரியன் உடலை ஆள்கிறது. விதி என்னும் இலக்கினம் தன்னை ஆள்கிறது. இம்மூன்றில் எது வலுவாக உள்ளதோ அதைச் சார்ந்த  முறையில் தொழிலை அமைத்துக்கொண்டால் நாம் எளிதில் வெற்றி பெறலாம்.

ஒரே இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. ஊர்ஊராக சுற்றித்திரிந்து வேலைசெய்வோரும் உண்டு. இரண்டையும் சேர்த்து அதாவது சற்று தொலைவான இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. இவற்றைத் தான் ஜோதிடம் சரம், ஸ்திரம், உபயம் என்று பிரித்துக் காண்பிக்கிறது.


மேலும் 10ம் பாவத்தை முதன்மை பாவமாக வைத்து மற்ற 12 பாவங்களுக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நாம் உணர முடியும். 12 பாவங்களுக்கும் தொழில் தொடர்பான பகுதிகள்.

இலக்கிண பாவம் – நம்முடைய புகழ் நிலை, அனுபவிக்கும் நிலை,
2ம் பாவம் – வருமானம்
3ம் பாவம் – எதிரிகளை சமாளிக்கும் மனநிலை
4ம் பாவம் – சுக வாழ்வு
5ம் பாவம் – அதிர்ஷ்டம்
6ம் பாவம் – எதிரிகள்
7ம் பாவம் – கூட்டாளிகள் வேலையாட்கள்
8ம் பாவம் – நிலைத் தன்மை
9ம் பாவம் – பாக்கியம்
10ம் பாவம் – செய்யும் தொழில்
11ம் பாவம் – கிடைக்கும் இலாபம்
12ம் பாவம் – விரயம் அல்லது நட்டம்

உதாரணமாக கூட்டுத் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு 7ம் பாவம் மற்றும் 4ம் பாவம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இலக்கிணத்திற்கு 7ம் பாவம் கூட்டாளிகளின் மனநிலை. கூட்டாளிகளிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி இவற்றைக் குறிக்கும். மேலும் 10ம் பாவத்திற்கு 7ம்பாவமான நான்காம் பாவம் மூலம் கூட்டணி மூலம் நாம் அடையும் நன்மையையும் குறிக்கும்.

பத்தாம் பாவம் அமைந்த ராசி, ராசியின் அதிபதி, ராசியைப் பார்க்கும் கிரகங்கள், அதிபதியைப் பார்க்கும் கிரகங்கள் இப்படிப்பட்ட நிலைகளைக் கவனமாக ஆராய்ந்தால் எது நம் உடல் மற்றும் மனநிலைக்கு உகந்த வேலை அல்லது நம்முடைய தொழில் அல்லது வேலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை புரிய வரும். சூழ்நிலையை  உணர்ந்து செயல் பட்டால் நாம் தான் வெற்றியாளர்.

No comments:

Blogger Gadgets