Saturday, March 8, 2014

இளநரை போக்க மூலிகை எண்ணெய்---இய‌ற்கை வைத்தியம்

இளநரை போக்க மூலிகை எண்ணெய்---இய‌ற்கை வைத்தியம்

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.  ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள்.  அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.  இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால்  அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.  மேலும்,  அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.  மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.  ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.  சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்    - 3
கறிவேப்பிலை    - 2 இணுக்கு
கொத்தமல்லலி    - சிறிதளவு
நெல்லி வற்றல்    - 10 கிராம்
வெட்டிவேர்        - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால்  இளநறை நீங்கும்.


நரை முடி நீங்க


நரை முடி வருவதை தவிர்க்க தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் இந்த மூன்றையும் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து குளித்து வர இள நரை வருவதை தவிர்க்கலாம்.
செம்பட்டை முடி கருப்பாக மாற மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் செம்பட்டை முடி கருப்பாக மாறும்.
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இள நரை நீங்கும்.




No comments:

Blogger Gadgets