Saturday, May 3, 2014


மாங்கல்ய தோஷம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பொதுவாக நமது ஜனன காலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்ப டையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. 

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம். 

இப்போது மாங்கல்ய தோஷத்தைப் பற்றியும், அதற்கான பரிகார பலன்களையும் பார்ப்போம். மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். மனிதப் பிறவி எடுப்பதே, இல்லற வாழ்வில் ஈடுபட்டு, நல்லறம் செய்து, சந்ததிகளை உருவாக்குவதே. எனவே திருமணம் என்பது மானிடர்களுக்கு இன்றியமையாதது. 

பருவ வயது வந்த ஒவ்வொருவருக்கும், திருமண இச்சை ஏற்படுவதும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குவதும் இயற்கையே. திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடனே பெண்ணோட, பையனோட ஜாதகத்தைப் பார்க்கலாம் என்பார்கள். திருமணம் கூடிவர ஜாதகம், சாதகமாக இருக்க வேண்டியது அவசியம் என்றாகிறது. 

சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா, புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது தடை உண்டாகும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். 

இதில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. இது பெண்ணிற்கு மட்டுமல்ல, ஆணிற்கும், 8-ஆம் இடத்தில் மேற்கூறிய கிரகங்கள் இருந்தால் கெடுபலனையே தரும். 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். 

அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும். ஆண் பெண் இருவருக்கும் இதே மாதிரியான அமைப்பு இருந்தால், மைனஸ் ஒ மைனஸ் ஸ்ரீ பிளஸ் என்பதைப் போல, இவர்கள் இணை பிரியாத தம்பதியர்களாக, நீடித்த ஆயுளுடன், இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள். ஆணிற்கு, 8-இல் சனி இருந்தால் ஆயுள் தீர்க்கம். 

பொதுவாக, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், 7-ஆம், 8-ஆம் இடம் காலியாக இருந்தால் தோஷமில்லை என்று அர்த்தம். இந்த 8-ஆம் இடத்தை மையமாக வைத்துத்தான், மாங்கல்ய பலம், இருக்கிறதா, இல்லையா என்று தீர்மானிக்கிறோம். சரி, 8-ஆம் இடம் தான் வில்லங்கமா? வேறு இடங்கள் தோஷத்தை ஏற்படுத்துமா? இல்லையா என்பதைப் பார்ப்போம்.

லக்னத்திற்கு 7-ஆம் இடத்தில், சூரியன் - செவ்வாய், செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் தோஷம் ஏற்படும். 8-வது வீட்டில், செவ்வாய் -ராகு, செவ்வாய் - கேது, செவ்வாய் - சனி, சனி-ராகு, சனி-கேது சேர்க்கைகள் இருந்தாலும் தோஷம் தான். இருந்தாலும், இந்தக் கிரகச் சேர்க்கைகளை, குரு பார்த்தால், தோஷம் விலகி ஓடிவிடும், அதே போல், களத்ரகாரகனான சுக்ரன் பார்த்தாலும் தோஷம் ஓடும். 

8-ஆம் அதிபதியோடு, 3,9-ஆம் பாவம் அல்லது 3,9-ஆம் பாவாதிபதியும் சம்பந்தம் பெற்றால், விபத்துகளால், இறப்பு நிகழும் என்ற ஜோதிடவிதி இருப்பதால், மாங்கல்ய தோஷம், ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறி, மாறி தோன்றும். 3,8-ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெற்றால், விபத்தால் தோஷம் நிகழும். 9-க்கு உரியவன் 8-இல் இருந்து, 3-க்கு உரியவன் 10-இல் இருந்தாலும் விபத்து தோஷம் ஏற்படும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில், 7-ஆம் இடத்தில், ஒன்றிற்கு மேற்பட்ட பாபகிரங்கள் இருந்தால், அந்தப் பெண், தனது வாழ்க்கையில் கைம்பெண்ணாகவே நீண்ட நாட்கள் வாழ நேரிடும். 7-ஆம் இடத்தில் சுப, பாபக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால், கணவனைக் கைவிட்டு, வேறொருவருடன் வாழ நேரிடலாம். 

சூரியன் - செவ்வாய் செர்க்கை இருந்தால் மாங்கல்ய தோஷம் என்று முன்னரே பார்த்தோம். இது எந்த பாவத்தில் இருந்தாலும் தோஷம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. 

சூரியன் - செவ்வாய், ஒரே பாதையில் சேர்ந்திருக்க வேண்டும். பாவ அமைப்பு சரி இல்லாமல் இருக்க வேண்டும். சுப பார்வையும் இருக்க வேண்டும். இதனையெல்லாம் முழுமையாக ஆய்வு செய்யாமல், பொத்தம் பொதுவாக தோஷம் என்று சொல்லிவிடக் கூடாது. 

No comments:

Blogger Gadgets