Thursday, May 15, 2014

நவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்


சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. செவ்வாயில் உயிரினங்கள் வசிக்கின்றன. என விஞ்ஞானிகள் கூறினாலும், உண்மையா என நிரூபிக்கப்பட வில்லை. ஜோதிட ரீதியாக செவ்வாயைப் பற்றி ஆராயும்போது செவ்வாயின் நிறம் சிவப்பாக உள்ளதாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய்க்கு தெற்கு திசை யோகதிசையாகும். தானியம் துவரை, உலோகம் செர்ணம், கோத்திரம் பரத்துவாஜர், சமித்து நாயுறுவி, நிறம் சிவப்பு,பாஷை தமிழ், குணம் தமோகுணம், ருசி துவர்ப்பு, பஞ்சபூதம் பூமி, கிழமை செவ்வாய், ரத்தினம் பவழம் ஆகியவை செவ்வாக்கு உரியதாகும். 

சூரியனுக்கு முன்பின் 17 டிகிரியில் செவ்வாய் இருக்கும் போது அஸ்தங்கம் அடைகிறார். சூரியனுக்கு 228 டிகிரியில் செவ்வாய் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 132  டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறது.
செவ்வாய்க்கு இன்னும் பல பெயர்கள் உண்டு அவை. அரண், பூமிஜன், குஜன், எரிவண்ணன், அலைன், அக்னி வக்கிரன், மங்கலன், மஹிஜன், மஹ§ஸ்தன், பார்மகன், பௌமண், தாராஸீதன், மேஷாதிபதி, விருச்சிகாதிபதி, நிலமகன், அங்குகன், குதிரன், யூமன், ருதிரன், செந்த வண்ணன், ரக்தன் என்னவாகும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதி செவ்வாயாவார். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும், கடகத்தில் நீசமும் பெறுகிறார். சிம்மம், தனசு, மீனம் முதலியவை நட்பு ராசிகளாகும். கன்னி, மிதுனம் முதலியவை பகை ராசிகளாகும். அதுபோல  செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு முதலியவை நட்பு கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமகிரகங்கள். புதன், ராகு, கேது, பகை கிரகங்களாகும். தான் இருக்கம் வீட்டிலிருந்து 4,7,8 ஆகிய வீடுகளை பார்வை செய்கிறார். உபஜெய ஸ்தானமாகிய 3,6,10,11 ல் மிகவும் பலம் பெறுகிறார். செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 3,6,11 ல் வரும் போது மிகவும் நற்வலன்கள் ஏற்படும் செவ்வாய் சனி, ராகு போன்ற கிரக சேர்க்கை அல்லது ஒருவருக்கொருவர் பார்வைப் பெற்று 6,8 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அதன் தசாபுக்தி காலங்களில் விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

செவ்வாயின் காரகத்துவங்கள்

செவ்வாய் பகவான் சகோதர, சகோதரிகள், பூமி, முருகக் கடவுள், பத்ரகாளி, இனப்பற்று, கோபப்படுதல், நெருப்பு சம்பந்தமுள்ள தொழில், தீப்பெட்டி, கெரசின், சுண்ணாம்பு, ஓடு, போலீஸ், ராணுவம், அரசாங்க பதவி, சண்டையிடுதல் சாகச செயல்கள், செம்பு, பவழம், துவரை, சமையல் செய்தல், கவலை, அலைச்சல், ஆப்பரேஷன், சோரம் போதல், தைரியம், விதவைப் பெண்ணிடம் உறவு, விபத்தினால் மரணம், மல்யுத்தம், தூது செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.

செவ்வாயால் உண்டாகும் நோய்கள்

அம்மை, கண்களில் பாதிப்பு, குடல் புண், காக்காய் வலிப்பு, இருதய பாதிப்பு, உஷ்ண நோய், தோல் நோய், எதிரி மற்றும் உடன்பிறப்புகளிடம் சண்டையிடும் நிலை விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம், தொழுநோய், தோல் நோய் போன்றவை உண்டாகும். காதுநோய், பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு, மாதவிடாய் கோளாறு போன்றவையும் ஏற்படும்.

செவ்வாயால் உண்டாகக்கூடிய யோகங்கள்

குரு மங்கள யோகம், ருச்சுக யோகம், பிருகு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம்,

ருச்சுக யோகம்

செவ்வாய் ஆட்சியோ, உச்சமோ பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி மற்றவரைவழி நடத்தும் அமைப்பு உண்டாகும்.

குருமங்களயோகம்,

குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, மனை, வண்டி,  வாகன யோகம், நீண்ட ஆயுள் யாவும் சிறப்பாக அமையும்.

பிருகுமங்களயோகம்

சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, மனை, வண்டி வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்.

சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது. வீடு மனை, செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கம்.

செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4,7,8 ஆகிய இடங்களை பார்வை செய்வார். செவ்வாயின் பார்வை நற்பலன்களை ஏற்படுத்துவதில்லை. இதில் 7ம் பார்வை மிகவும் கொடியது. 4,8 ம் பார்வைகள் 75 சதவீதம் கொடியது.
செவ்வாய் ஒருவருக்கு 5 வது திசையாக  வந்தால் அந்த தசா முடியும்போது மரணம் உண்டாகும் என்பது ஜோதிட விதியாகும். அசுவினி, மகம், மூலம் ஆகிய கேதுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலோ குரு பார்வை இருந்தாலோ பெரிய கெடுதிகள் ஏற்படுவதில்லை.

புதையல் கிடைக்கும் யோகம்

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் கூடி 2,4 க்கும் உடையவர்களின் சேர்க்கையுடன் ஜென்ம ராசிக்கு 2ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 4,11 க்கு உடையவர்கள் 9 ல் நிற்க அவர்களை செவ்வாய் பார்வை செய்தாலும் எதிர்பாராத வகையில் புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகம்.

செவ்வாய் தோஷம்

ஒருவர் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2, சுகஸ்தானமான 4, களத்திர ஸ்தானமான 7, மாங்கல்ய ஸ்தானமான 8, கட்டில் சுக ஸ்தானமான 12 போன்ற இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் உண்டாகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்தால் மட்டுமே மண வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையெனில் மண வாழ்க்கை ரீதியாக செவ்வாய் திசை அல்லது புக்தி காலங்களில் பிரச்சினைகளையும் இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.
செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறுவது நல்லது. செவ்வாய் பலமிழந்து இருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் கோளாறு உண்டாகும்.

செவ்வாயின் பரிகார ஸ்தலம்

செவ்வாயின் பரிகார ஸ்தலமாக வைத்தீஸ்வரன் கோவில் விளங்குகிறது.சகல வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டு ஸ்ரீவைத்திய நாத சுவாமி இத்ரரிருத்தலத்தில் செவ்வாயின் தொழுநோயை குணப்படுத்த மருத்துவராக வந்தவர். இங்கு செவ்வாய் எனும் அங்காரகன் வீற்றிருப்பதால் இது அங்காரக ஷேத்திரம் எனப்படும். முத்தையா என அனபுடன் அழைக்கப்படும் முத்து குமாரசுவாமியே இத்தலத்தின் முருகன். வைத்தீஸ்வரன் கோவில் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாயை வழிபடும் முறை 

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது.


கோதுமை ரொட்டி, சர்க்கரை, வெள்ளை, எள்கலந்த இனிப்பு வகைகள் மற்றும்


துவரையை செவ்வாய் கிழமைகளில் ஒரு மணமாகாத ஆணுக்கு
தானம் கொடுப்பது.


செவ்வாக்கிழமைகளில் விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.


கார்த்திகேய பூஜை, ருத்ராபிஷேகம் செய்வது மூன்றுமுகருத்ரலலட்சம் அணிவது. செண்பகப்பூவால் அர்ச்சனை செய்வது,


பவழ மோதிரம் அணிந்து கொள்வது, செப்பு பாத்திரங்களை உபயோகிப்பது,
சிவப்பு நிற ஆடை மற்றும் கைகுப்டையை பயன்படுத்துவது, நெற்றியில் சிவப்பு சந்தனத்தால் திலகம் அணிவது,

மாய நமஹ என்ற செவ்வாயின் மூல மந்திரத்தை 40 நாட்களில் 7000 முறை சொல்லி வழிபடுவது ஆகியவை.


செவ்வாயின் ஓரையில் செய்யக் கூடியவை


பூமி சம்பந்தப்பட்ட வேலைகள் செய்தல், நெருப்பு சம்பந்தப்பட்ட பணிகள் செய்தல் அதிகார பதவிகளை ஏற்பது நல்லது. செவ்வாய் சண்டை காரகன் என்பதால் புதிய முயற்சிகள், முக்கிய பேச்சு வார்த்தைகள் போன்றவற்றை மேற்கொள்வது நல்லதல்ல. அப்படி மேற்கொண்டால் சண்டை சச்சரவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

No comments:

Blogger Gadgets